தமிழ்த் திரையுலகில் ஜெயம் என்னும் திரைப்படம் மூலம் அறிமுகமாகி அதன் பின் தன்னுடைய நடிப்புத் திறமையால் தனக்கென ஒரு இடத்தைத் தக்க வைத்துக் கொண்டவர் ஜெயம் ரவி. மற்ற நடிகர்களைப் போல் மாஸ் காட்சிகள் அதிகம் இல்லாமல் எளிமையான நடிப்பால் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே ஏற்படுத்திக் கொண்டவர். இவர் நடிக்கும் ஒவ்வொரு படத்திலும் வித்யாசமான கதாபாத்திரத்தை ஏற்று நடிப்பவர். இவர் நடித்து வெளிவந்த எம் .குமரன் சன் ஆப் மஹாலக்ஷ்மி, உனக்கும் எனக்கும், சந்தோஷ் சுப்பிரமணியம், பேராண்மை மற்றும் தனி ஒருவன் போன்ற படங்கள் இவருக்கு மாபெரும் வெற்றியைப் பெற்றுத் தந்ததுடன் முன்னணி நடிகர் என்ற அந்தஸ்த்தையும் வழங்கியது.
இவர் இறுதியாக நடித்து வெளியான திரைப்படம் பூமி. இந்த திரைப்படம் கடந்த ஜனவரி மாதம் டிஸ்னி + ஹாட்ஸ்டார் வலை தளத்தில் வெளியிடப்பட்டு மக்களிடம் ஓரளவு நேர்மறையான விமர்சனங்களை பெற்றிருந்தது. விவசாயம் எவ்வாறு அழிந்து கொண்டிருக்கிறது என்றும் வறட்சியிலிருந்து தன்னுடைய நிலத்தையும் மக்களையும் எவ்வாறு ஜெயம் ரவி காப்பாற்றுகிறார் என்ற கதைக்கருவை மையமாகக் கொண்டும் கதைக்களம் அமைக்கப் பட்டிருக்கும்.
மேலும் இவர் தற்போது மணி ரத்னம் இயக்கத்தில் விக்ரம், ஐஸ்வர்யா ராய் பச்சன், கார்த்தி, த்ரிஷா, ஜெயராம், விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா லெக்ஷ்மி மற்றும் சோபிதா துலிபாலா போன்ற பிரபல முன்னணி நடிகர் நடிகைகளுடன் "பொன்னியின் செல்வன்" என்னும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். பொன்னியின் செல்வன் என்னும் நாவலை தழுவி எடுக்கப்படும் இந்தத் திரைப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இப்படம் அடுத்த வருடம் வெளியாகலாம் என கூறப்படுகிறது.
அதோடு இயக்குநர் அகமதுவுடன் "Jana Gana Mana" என்னும் படத்திலும் ஜெயம் ரவி நடித்து வருகிறார் . தாப்ஸி, ரஹ்மான், எம்.எஸ். பாஸ்கர், ராம், எல்னாஸ் நோரூஸி மற்றும் நானா படேகர் ஆகியோரும் இந்த படத்தில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்நிலையில் ஜெயம் ரவியின் 28-ஆவது திரைப்படம் குறித்த அதிகாரப் பூர்வாணமான அறிவிப்பு இன்று Twitter பக்கத்தில் வெளியிடப்பட்டது. #JR28 என்கிற ஹேஷ்டேகில் ட்விட்டரில் வெளியாகியிருக்கும், அந்த அறிவிப்பு போஸ்டரில் இப்படத்தை ஸ்கிரீன் சீன் ஸ்டுடியோஸ் தயாரிக்க உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இப்படத்தை கல்யாண கிருஷ்ணன் இயக்குவதாக செய்திகள் வெளிவந்துள்ளன.
ஜெயம் ரவி நடிப்பில், கல்யாணகிருஷ்ணன் இயக்கத்தில் முன்னதாக 2015-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 'பூலோகம்'. வடக்கு மெட்ராஸில் இருக்கும் இரண்டு குத்துசண்டை பிரிவினரிடையே நடைபெறும் மோதல்களை எதார்த்தமான சண்டைக் காட்சிகள் நிறைந்த படமாக இயக்கியிருப்பார் கல்யாண கிருஷ்ணன். இந்தத் திரைப்படம் வெளிவந்து மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றத்தைத் தொடர்ந்து மீணடும் இந்த கூட்டணி இணைவதால் இப்படத்தின் மேலுள்ள எதிர்பாப்புகள் அவரது ரசிகர்களிடம் அதிகரித்துள்ளது. மேலும் இப்படத்தில் கதாநாயகியாக மேயாத மான், கடைக்குட்டி சிங்கம் போன்ற படங்களில் நடித்த நடிகை பிரியா பவானி சங்கர் நடிக்கப்போவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆகஸ்ட் மாதத்தின் நடுவில் இருந்து தொடங்க உள்ளது. இது ஒரு அதிரடி சண்டைக் காட்சிகளைக் கொண்ட ஒரு திரில்லர் படமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
